We are an organisation driven by GANDHIAN philosophy involved in providing free education since 1975. We have around 500 students and 25 volunteer-teachers who handle all classes without taking a single pie. Our financial sources are voluntary contributions from students, alumni and other generous noble souls. We give utmost importance to discipline and being guided by Gandhian principles, We hope to light a lamp of literacy, which though small, drives away darkness of ignorance.
Thursday, May 14, 2015
Sunday, October 5, 2014
”குங்குமம்” வார இதழில் ( 06-10-2014 ) கழகம் பற்றிய கட்டுரை
” இங்க படிச்சுட்டுப் போன யாரும் லஞ்சம் வாங்க மாட்டாங்க “
‘‘எங்க காலம் வரைக்கும் நெசவாளர் குடும்பத்துப் பிள்ளைங்க யாரும் பள்ளிக்கூடம் போனதில்லை. தறியில சீடா போட விட்டுருவாங்க. நானும் 2ம் வகுப்புதான் படிச்சேன். அதுக்குப் பிறகு சீடாவுல உக்காந்துட்டேன். வளர வளர, ‘படிக்கலையே’ங்கிற வருத்தமும் வளர்ந்துச்சு. 20 வயசுல காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிக் கேள்விப்பட்டு வந்து சேந்தேன். இப்போ பி.ஏ. முடிச்சுட்டு இந்தி ஆசிரியரா இருக்கேன்...’’ பூரிப்பாகச் சொல்கிறார் மாணவர் சுப்ரமணி.
மிகவும் ஏழ்மையான சூழலில் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய தனராமன், இன்று ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியர். அவரையும் உருவாக்கியது காந்தியடிகள் நற்பணிக் கழகம். கடந்த 39 ஆண்டுகளில் செல்வத்தையும் தனராமனையும் போல படிக்க வாய்ப்பற்ற பல நூறு இளைஞர்களை படிப்பாளிகளாக்கி வாழ்க்கையை மாற்றியிருக்கிறது கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக் கழகம். இதன் நிறுவனர், பாலசுப்பிரமணியன்.
எளிமையும் தூய்மையுமாக வாழும் சமரசமற்ற காந்தியவாதி. இவரும் ஒரு குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர்தான். வெற்று வார்த்தைகளைப் போதிக்காமல் தன் வாழ்க்கையையே பாடமாக்கிப் போதிக்கும் இவர், தன் வாழ்வாதாரத்துக்காக சிறிய மளிகைக்கடை நடத்துகிறார்.
‘‘ சமூகத்துக்குப் பயனுள்ள நல்ல குடிமக்களை உருவாக்குறது தான் கல்வின்னு சொன்னார் காந்தி. ஆனா இன்னிக்கு கல்வியோட நோக்கம் மாறிடுச்சு. வாழ்க்கைக்கான கல்வி அழிஞ்சு, வேலைக்கான கல்வியா மாறிடுச்சு.
நாங்க எங்க அளவுல அதை மாத்த போராடுறோம். காந்தியோட 18 ஆக்கப்பணிகள்ல இன்றைய நடைமுறைக்குச் சாத்தியப்பட்ட பணிகளை செஞ்சுக்கிட்டிருக்கோம்...’’ அடக்கமாகப் பேசுகிறார் பாலசுப்பிரமணியன்.
மிகச் சிறிய அறை ஒன்றில் தொடங்கிய காந்தியடிகள் நற்பணிக் கழகம், இன்று பிரமாண்டமான சொந்தக் கட்டிடத்தில் இயங்குகிறது. எல்லாம் இங்கு படித்து முன்னேறிய பழைய மாணவர்களின் கொடை. ‘‘நான் சின்னவனா இருக்கும்போதே அப்பா தவறிட்டார். வீட்டுல நான்தான் மூத்தவன்.
ரெண்டு தம்பிங்க, ஒரு தங்கை. குடும்பத்துக்கு வருமானம் இல்லாமப் போச்சு. செம்பியன் மாதேவி கிராமத்துல எங்க சின்னம்மா மளிகைக்கடை வச்சிருந்தாங்க. ‘இங்கிருந்து படி, ஓய்வு நேரத்துல கடையில நில்லு’ன்னு கூப்பிட்டாங்க; போயிட்டேன்.
தன்னிலப்பாடிங்கிற ஊர்ல உள்ள காந்தியடிகள் நடுநிலைப்பள்ளியிலதான் படிச்சேன். காந்தியை மனசுக்குள்ள சிம்மாசனம் போட்டு உக்கார வச்சது அந்தப் பள்ளிதான். ‘ஆர்.என்.ஆர்’னு ஒரு நல்ல மனிதர் தொடங்கின பள்ளி அது. பழுத்த காந்தியவாதி. மற்றவர்களுக்காக வாழ்கிற வாழ்க்கையை அந்த பள்ளி தான் கத்துக் கொடுத்துச்சு. ஆசிரியர்கள் எல்லாருமே முன்மாதிரிகளா வாழ்ந்தாங்க. படிப்பு மேல எனக்கு பெரிய ஈர்ப்பு. அப்போ ராமநாதபுரம் வட்டாரத்துல இருந்து எங்க பகுதிக்கு நிறைய பேர் பிழைப்புத் தேடி வருவாங்க.
அவங்க சொல்ற பஞ்சக்கதைகளைக் கேட்டு மனசுக்கு கஷ்டமா இருக்கும். படிச்சு ராமநாதபுரத்துக்கு கலெக்டரா போகணும்ங்கிறது என் கனவு. ஆனா குடும்பச்சூழல் இணக்கமா இல்ல. தம்பி களையும், தங்கையையும் படிக்க வைக்கணும். அதனால எட்டாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு கடையிலயே நின்னுட்டேன். கொஞ்சநாள்ல கும்பகோணம் வந்து சொந்தமா ஒரு மளிகைக்கடையை ஆரம்பிச்சேன்.
மனசுக்குள்ள படிக்க முடியலையேங்கிற தவிப்பு. அப்போ, காமராஜர் பல்கலைக்கழகத்துல மெட்ரிக்குலேஷன் படிப்புன்னு ஒண்ணு இருந்துச்சு. எஸ்.எஸ்.எல்.சிக்கு இணையான
அந்தப் படிப்பை வீட்டில இருந்தபடி படிக்கலாம்.
அதுல சேந்தேன். அப்போ வயசு 23. காந்தியோட 18 ஆக்கப்பணிகள்ல இந்திப் பிரசாரம் முக்கியமானது. இந்தியின் மூலமா இந்தியாவை ஒருமைப்படுத்த நினைச்சார் காந்தி. அதே நேரம், தாய்மொழி வழிக்கல்வியையும் அந்த செயல்திட்டத்துல வலியுறுத்துறார். இந்தியைக் கத்துக்கணும்; தாய்மொழியில படிக்கணும். இதுதான் காந்தியம். நான் இந்தியில எம்.ஏ. முடிச்சேன்.
நான் இருந்தது, அடித்தட்டு மக்கள் வசிக்கிற பகுதி. அப்போ, எஸ்.எஸ்.எல்.சியில ஒரு பாடத்துல ஃபெயிலாப் போனா இப்போ உள்ளமாதிரி அந்தப் பாடத்தை மட்டும் எழுத முடியாது. எல்லாப் பாடத்தையும் திரும்பவும் எழுதணும். பரீட்சை எழுதற பாதிப்பேர் ஃபெயில் ஆகிடுவாங்க. வசதியுள்ள பிள்ளைகள் டுடோரியல் காலேஜ்ல சேந்து திரும்பவும் படிப்பாங்க. முக்கால்வாசிப் பேர் டுடோரியலுக்கு பணம் கட்ட முடியாம, படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போயிடுவாங்க.
வசதி இல்லாத பிள்ளைகளுக்காக ஒரு டுடோரி யல் தொடங்கலாம்னு யோசிச்சேன். சுந்தரமூர்த்தி, வீரராஜன், வீராச்சாமி, நாகராஜன்னு நாலு பேர் தோள் கொடுத்தாங்க. 1975, ஜூன் 5ம் தேதி காந்தியடிகள் நற்பணிக் கழகத்தைத் தொடங்கினோம். 50 பேர் படிக்க வந்தாங்க.
ஒருமுறை எங்க கழகத்துக்கு வந்த பேராசிரியர் நெ.து.சுந்தரவடிவேல், ‘சிறுவர்களுக்கு கல்வி புகட்ட நிறைய ஏற்பாடுகள் இருக்கு. குடும்பச் சூழ்நிலையால பள்ளி செல்ல முடியாம தொழிலாளர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு, அப்படியே வளர்ந்த பெரியவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும்’னு சொன்னார்.
அதை வேதவாக்கா எடுத்துக் கிட்டு பள்ளி இடைநின்றவர்களைத் தேடத் தொடங்கினோம். அவங்களுக்கு நேரடியா இ.எஸ்.எல்.சி தேர்வை எழுத பயிற்சி கொடுத்தோம். அடுத்து எஸ்.எஸ்.எல்.சி, பியூசி, டிகிரி... அப்படியே இந்தியும் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சோம். இப்படித்தான் காந்தியடிகள் நற்பணிக் கழகம் வளர்ந்துச்சு...’’ என்கிறார் பாலசுப்பிரமணியன்.
32 ஆசிரியர்கள்...
எல்லோரும் இங்கே படித்து வேலையில் இருப்பவர்கள். ஒரு பைசா சம்பளம் இல்லை. அதற்காக ஏனோதானோ என்றெல்லாம் வரமுடியாது. அனைத்திலும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். காலை ஆறே முக்காலுக்கு நற்பணிக் கழகம் திறக்கிறது. வேலை பார்த்துக் கொண்டே படிப்பவர்களுக்கு, எட்டே முக்கால் வரை வகுப்புகள். பிறகு, மாலை ஐந்தே கால் முதல் பத்து மணி வரை இந்தி மற்றும் தனிப்பயிற்சி வகுப்புகள். யாரிடமும் ஒத்தைப் பைசா வாங்குவதில்லை.
‘ ‘படிப்புக்கு பணம் தடையா இருக்கக்கூடாதுங்கிறது காந்தியோட கொள்கை. இப்போ வசதியில்லாத பிள்ளைகள் மேற்படிப்பு படிக்கறதுக்கு உதவி செய்ய நிறைய கொடையாளர்கள் தயாரா இருக்காங்க.
அவங்களை எங்க சேவையில இணைக்கிறோம். இங்கே படிக்கிற எல்லா மாணவர்களுக்கும் காந்திய சிந்தனையை தனிப்பாடமா பயிற்றுவிக்கிறோம். இங்கிருந்து போன யாரும் நிச்சயம் லஞ்சம் வாங்க மாட்டாங்க. கடமை தவற மாட்டாங்க. நிறைய பொறுப்பான பிள்ளைகளை உருவாக்கியிருக்கோம்...’’ பாலசுப்பிரமணியனின் முகத்தில் பெருமிதம்.
தாராசுரம் பொன்னியம்மன் கோயில் தெரு, ஒரு காலத்தில் கள்ளச் சாராயம் கரை புரண்டோடிய ஏரியா. இன்றைக்கு அது கட்டுக்கோப்பான பகுதியாக மாறியிருக்கிறது. மதுவை எதிர்க்கும் ஒரு புதிய தலைமுறையை இங்கு உருவாக்கியிருக்கிறது இந்தக் கழகம். இதற்குத்தானே ஆசைப்பட்டார் காந்தி மகான்! சமூகத்துக்குப் பயனுள்ள நல்ல குடிமக்களை உருவாக்குறதுதான் கல்வின்னு சொன்னார் காந்தி. ஆனா இன்னிக்கு கல்வியோட நோக்கம் மாறிடுச்சு.
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்
Wednesday, January 15, 2014
விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" விருது
விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" நிகழ்ச்சியின் சார்பில் 2013ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. நமது காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு "2013ம் ஆண்டின் சிறந்த நம்பிக்கையாளர்" விருது வழங்கப்பட்டது. அமைப்பாளரின் சார்பில் அவரது மனைவி ஞானம், மகன் குருபிரசாத் , சகோதரர் சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி 1-1-2014 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் பாராட்டு
Saturday, September 7, 2013
புதிய தலைமுறை கல்வி இதழில் நமது கழகம் பற்றி......
புதிய தலைமுறை கல்வி - 26-08-2013 - இதழில் நமது கழகம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.
http://www.puthiyathalaimurai.com/this-week/2017
கல்வி தரும் காந்தியடிகள் நற்பணிக் கழகம்!
“நாங்கள் ஐந்து பேர் இணைந்து பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு, இலவசமாக பாடம் எடுப்பதற்காக, 1975-ஆம் ஆண்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். முதல் ஆண்டே நாங்கள் பயிற்றுவித்த 50 மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்” என்று விவரிக்கிறார் இக்கழகத்தின் நிறுவனரான பாலசுப்ரமணியன்.
நெசவாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே விட்டு விடுவதை அறிந்து, அந்த மாணவர்களைத் தேடிப் பிடித்து காலை, மாலை நேரங்களில் அவர்களுக்கு பாடம் சொல்லித் தந்து அவர்களைப் படிக்க வைத்திருக்கிறார்கள். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே கொத்தனார், பெயிண்டர் என்ற பலவிதமான வேலைகளுக்குச் சென்றவர்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். அத்துடன், மாணவர்களுக்கு ஹிந்தி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்கள்.
“தாராசுரம் பொன்னியம்மன் கோயில் தெரு என்னும் பகுதி சாராயம் காய்ச்சுபவர்களும், குடிகாரர்களும் நிறைந்த பகுதியாக முன்பு இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன் அங்கு ஒரு காந்தி சிலையை வைத்தோம். அந்தப் பகுதி இளைஞர்களுக்கு கல்வியும், நீதிபோதனை வகுப்புகளும் எடுத்தோம். அதன் விளைவாக அந்தப் பகுதியே இன்று மாறிப்போய் உள்ளது. அந்தப் பகுதியிலிருந்து வந்து எங்களிடம் கல்வி கற்ற இளைஞர்கள் இன்று மிக உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். இன்று அந்த கிராமமே மதுப்பழக்கமற்ற பகுதியாக மாறியுள்ளது” என்கிறார் பாலசுப்ரமணியன்.
2003-ஆம் ஆண்டுவரை வாடகைக் கட்டடத்தில்தான் இக்கழகம் இயங்கி வந்தது. 2003-இல் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இப்போது இயங்கிவரும் கட்டடத்தை கட்டித் தந்துள்ளனர். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் கல்விச் சேவை, பின்னர் பிளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவடைந்தது. இவர்களது கழகத்தைப் பொருத்தவரை கல்விக்கு மட்டுமல்லாது நீதிபோதனை வகுப்புகள், ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றையும் இணைத்தே மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.மேற்படிப்பு படிப்பதற்கு வசதியில்லாத மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் மூலமாக உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள்.
“இங்கு வந்து வகுப்பெடுப்பவர்கள் அனைவருமே எங்கள் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள்தான். எனவே அவர்கள் எல்லோருமே எந்தவிதப் பிரதிபலனையும் பாராமல் கல்விச் சேவை புரிகின்றனர். அதுபோல மாணவர்களிடம் இருந்து நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை” என்கிறார் பாலசுப்ரமணியன்.
“நான் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருந்தேன். குடும்ப வறுமை காரணமாக என் வீட்டில் என்னை தச்சு வேலைக்கு அனுப்பிவிட்டனர். கல்வி வாசமே இல்லாமல் இருந்த என்னை என் அண்ணன்தான் எனது 20-ஆவது வயதில் இந்தக் கழகத்தில் சேர்த்து விட்டார். நான் இப்போது பி.ஏ. படித்துள்ளேன். ஹிந்தி ஆசிரியராகவும் உள்ளேன். நான் குழந்தைத் தொழிலாளியாக இருந்து வேலை பார்த்த தறித் தொழிலை இன்று நானே சொந்தத் தொழிலாகச் செய்து, தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் எனது துணிகளை அனுப்பும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இந்தக் கழகம் தந்த கல்விதான். வெறும் கல்லாக இருந்த என்னை இந்தக் கழகம்தான் சிற்பமாக மாற்றியது.” என்கிறார் சுப்ரமணியன்.
இந்த அமைப்பைத் தொடங்கும் போது பாலசுப்பிரமணியனுடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட, இவர் மட்டும் விடாமல் தொடர்ந்து காந்தியடிகள் நற்பணிக் கழகத்தை நடத்தி வருகிறார். வாழ்க்கையை நடத்த மளிகைக் கடை நடத்தி வரும் இவர், படித்தது எட்டாம் வகுப்பு வரைதான். ஆனால் விடா முயற்சி காரணமாக இரண்டு எம்ஏ பட்டங்களைப் பெற்றுள்ளார்.












